பக்கங்கள் செல்ல

Sunday, October 30, 2022

யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


            
    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்பதாகும். யமாமா யுத்தமானது ஹிஜ்ரி 11-12ல் , தன்னைதானே இறைத்தூதர் என்று அறிவித்து இஸ்லாமிய அரசிற்கு எதிராக பனு ஹனிஃபா கிளையாரின் இனவெறியை தூண்டி , போர்பிரகடனம் செய்த முஸைலாமா என்ற பொய்யனுக்கு எதிராக நடைபெற்றதாகும். இந்த போரில் குர்ஆனை மனனமிட்ட பல ஹாஃபிழ்கள் கொல்லப்பட்டனர்.
           இந்த விஷயத்தை கையில் எடுத்த இஸ்லாமோஃபோபுகள் "இந்த யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டன.எனவே இன்றைய குர்ஆனில் அந்த பகுதிகள் இல்லை. எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை" என்று விமர்சனம் செய்துவருகின்றனர். அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அவர்களது வாதங்களையும் அதற்கு உரிய தக்க பதில்களையும் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
    இதற்கு ஆன்சரிங் இஸ்லாம் போன்ற இஸ்லாமோஃபோபியா பிடித்த வலைத்தளங்கள் முதல் ஆதாரமாக முன்வைப்பது The True Guidance - An Introduction To Qur'anic Studies, published by Light of Life, P.O. BOX 13, A-9503 Villach, Austria, part 4, p. 47– என்ற மிசனரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலில் இருந்துதான். அதனை முதலில் காண்போம்.
    “During the battle of Yamama, 450 reciters of the Qur'an were killed.” (The True Guidance - An Introduction To Qur'anic Studies, published by Light of Life, P.O. BOX 13, A-9503 Villach, Austria, part 4, p. 47– citing Ibn Kathir’s Al-Bidaya wa al-Nihaya, chapter on Battle of Yamama)
    யமாமா யுத்தத்தின் போது 450 குர்ஆன் காரிகள் (குர்ஆனை மனனமிட்டவர்கள்) கொல்லப்பட்டார்கள். இப்னு கதீர் அவர்களது பிதாயா வந் நிஹாயா , பாடம் யமாமா யுத்தம் பகுதி 4, பக்கம் 47 குறிப்பின் மேற்கோள்படி.
                இதில் யமாமா யுத்தத்தில் 450 காரிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி 4ம் பாகத்தில் எங்கும் இடம் பெறவில்லை. மாறாக இப்னு கதீர் அவர்களது பிதாயா வந் நிஹாயாவில் 6ம் பாகம் 332ம் (அல்லது 6/373) பக்கத்தில் யமாமாவில் கொல்லப்பட்டவர்கள் குறித்த குறிப்பு பின்வருமாறு இடம் பெறுகிறது.


           குர்ஆனை மனனமிட்டவர்கள் மட்டும் 450 பேர் கொல்லப்பட்டதாக இஸ்லாமோஃபோபியா வலைத்தளங்கள் கூறுவது வடியகட்டிய பொய் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இப்படி ஒரு அறிஞரின் கருத்தை மேற்கோள் காட்டுவதில் கூட நேர்மையற்றவர்கள்தான் இஸ்லாமோஃபோபுகள். மேலும் இமாம் குர்துபி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்
    ﻭﻗﺎﻝ اﻟﻘﺮﻃﺒﻲ: ﻗﺪ ﻗﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﺳﺒﻌﻮﻥ ﻣﻦ اﻝﻗﺮاء
      குர்துபீ அவர்கள் கூறியதாவது: யமாமாவில் கொல்லப்பட்டவர்களில் 70 பேர் காரிகள் ஆவர்.(அல் இத்கான் 1/245).
        இந்த கூற்றுதான் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும்பான்மையினரால் ஏற்கபட்ட கருத்து. இது போக இன்னொரு விஷயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது 450 பேர் கொல்லப்பட்ட யுத்தத்தில் 70 பேர் காரிகள் என்றாலே மக்களில் 7ல் 1 நபர் குர்ஆனை மனனமிட்டவர் என்றாகிவிடும். அன்றைய மொத்த சமூகத்தில் எத்துனை நபர்கள் இருந்திருப்பார்கள் என்ற கணிப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.......அல்லாஹு அஃலம்.

    ஆதாரம் 2: உமர்(ரலி) குர்ஆன் ஆயத்தை தேடினார்களா??

               அடுத்ததாக யமாமா யுத்தம் குறித்த செய்தியின் அடிப்படையில் இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் இதோ.
    அல் ஹஸன் அல் பஸ்ரி கூறியதாவது:
                    உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார். ( கிதாப் அல் மஸாஹிஃப் 1/60,துர்ருல் மன்சூர் 6/558 , கன்சூல் உம்மால் 2/574 )
                    மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு இஸ்லாமோஃபோபுகள், உமர்(ரலி) ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். அது யமாமாவில் கொல்லப்பட்டவருடன் சென்று விட்டது எனவே அது குர்ஆனில் இல்லை. இவ்வாறு குர்ஆனின் பலவசனங்கள் யாமாமாவில் கொல்லப்பட்டவர்களுடன் சென்று விட்டது என்பதால் அல் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அந்த ஹதீஸின் நிலை குறித்து முதலில் பார்ப்போம்.

    ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺧﻼﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻳﺰﻳﺪ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺒﺎﺭﻙ، ﻋﻦ اﻟﺤﺴﻦ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻓﻘﻴﻞ ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻓﻘﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ ﻭﺃﻣﺮ ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻊ، ﻭﻛﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ
    அல் ஹஸன் அல் பஸ்ரி கூறியதாவது:
              உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார். ( கிதாப் அல் மஸாஹிஃப் 1/60,துர்ருல் மன்சூர் 6/558 , கன்சூல் உம்மால் 2/574 )
    மேற்குறிபிட்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
            1. அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத்
            2. முபாரக் இப்னு ஃபதாலா

    1)அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லத் குறித்த விமர்சனம்
                இப்னு ஹிப்பான் அவர்களை தவிர யாரும் இவர் குறித்து பேசவில்லை.
    عبد الله بن محمد بن خلاد الواسطي أبو أمية يروى عن يزيد بن هارون ثنا عنه محمد بن يحيى بن لؤي بفم الصلح

            அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத் அல் வாஸ்தீ அபூ  உமியா என்பவர் யஸீத் இப்னு ஹாரூன் என்பவரிடம் இருந்து அறிவிக்கிறார். இவரிடம் இருந்து செவியுற்று முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு லூஐ, அல் சுல்ஹ் வழியாக அறிவிக்கிறார்.( திக்காத் இப்ன் ஹிப்பான் 13916).

        இதிலும் கூட இப்னு ஹிப்பான் இவரது தரம் குறித்து எதுவும் கூறவில்லை. இவரிடம் கேட்டவராக கூறப்படுபவரும் இப்னு ஹிப்பான் அவர்களால் கூறப்பட்டவர் இல்லை. அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத்  தரம் அறியப்படாதவர் ஆவார்.

    2)முபாரக் இப்னு ஃபதாலா குறித்த விமர்சனம்

    وقال الدارقطني لين كثيرالخطأ يعتبر به

        முபாரக் இப்னு ஃபதாலா குறித்து தாரகுத்நீ கூறுகையில் பொடும்போக்கானவர். அதிகம் தவறுவிடுபவர் என்று விமர்சிக்கிறார் (தஹ்தீப் அல் தஹ்தீப் 9050). இருட்டடிப்பு செய்பவர் என்று இப்னு ஹஜர் தக்ரீப் அல் தஹ்தீப் 6464 ல் கூறுகிறார்.

    இந்த செய்தி குறித்து அறிஞர்களின் கருத்து
    ﻓﻀﺎﻟﺔ ﻋﻦ اﻟﺤﺴﻦ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ، ﻓﻘﻴﻞ: ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻓﻘﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ، ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ، "ﻓﺄﻣﺮ" ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻊ، ﻓﻜﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻰ اﻟﻤﺼﺤﻒ. ﻭﻫﺬا ﻣﻨﻘﻄﻊ؛ ﻓﺈﻥ اﻟﺤﺴﻦ ﻟﻢ ﻳﺪﺭﻙ ﻋﻤﺮ
        இதே செய்தியை பதிவிட்டு தனது ஃபாதாயில் அல் குர்ஆன்(1/59) மற்றும் முஸ்னத் அல் ஃபாரூக் (2/561) ஆகிய நூல்களில் இப்னு கதீர் அவர்கள் இது அறிவிப்பாளர் முறிந்த செயதி என்றும், இதனை அல் ஹஸன், உமர்(ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்றும் கூறுகிறார்.

            இஸ்லாமோஃபோபுகள் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சிக்கும் போதெல்லாம் இந்த நூலில் இருந்து மேற்கோள் காட்டாத கட்டுரைகளே இல்லை எனும் அளவுக்கு அல் சூயூத்தியின் இத்கான் எனும் நூலை கையாண்டிருப்பார்கள். அந்த நூலில் அல் சூயூத்தி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
    ﻭﺃﺧﺮﺝ اﺑﻦ ﺃﺑﻲ ﺩاﻭﺩ ﻣﻦ ﻃﺮﻳﻖ اﻟﺤﺴﻦ ﺃﻥ ﻋﻤﺮ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻓﻘﻴﻞ: ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻗﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ! ﻭﺃﻣﺮ ﺑﺠﻤﻊ اﻟﻘﺮﺁﻥ ﻓﻜﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ. ﺇﺳﻨﺎﺩﻩ ﻣﻨﻘﻄﻊ
          "உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார் என்ற செய்தி இப்னு அபீதாவுத் அவர்கள் அல்ஹஸன் வழியாக அறிவிக்கிறார்கள்.  இது அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி ஆகும். (அல் இத்கான் 1/205).
        அல் ஸவ்ரி கூறியதாவது: அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் முஸைலமாவுடனான போரின் நாளில் கொல்லப்பட்டனர். குர்ஆனின் அவர்களது ஓதல் முறை அத்துடன் சென்றுவிட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13363)
                மேற்குறிபிட்ட செய்தியின் அடிப்படையில், யமாமாவில் குர்ஆன் காரிகள் இறந்து போனதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகள் முவைக்கும் வாதம். அதற்கான பதிலை காண்போம். 

    நமது பதில்: அஸ்ஸவ்ரி அவர்களது முன்கத்தீ அறிவிப்பு
    ﻗﺎﻝ اﻟﺜﻮﺭﻱ: ﻭﺑﻠﻐﻨﺎ ﺃﻥ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻧﻮا ﻳﻘﺮءﻭﻥ اﻟﻘﺮﺁﻥ ﺃﺻﻴﺒﻮا ﻳﻮﻡ ﻣﺴﻴﻠﻤﺔ ﻓﺬﻫﺒﺖ ﺣﺮﻭﻑ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ "
    அஸ்ஸவ்ரி கூறியதாவது:
        அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் முஸைலமாவுடனான போரின் நாளில் கொல்லப்பட்டனர். குர்ஆனின் அவர்களது ஓதல் முறை அத்துடன் சென்றுவிட்டது என்ற செய்தி மேலும் எங்களுக்கு கிடைத்தது. (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13363)
        இது அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி (முன்கத்தீ) ஆகும். சுஃப்யான் அஸ்ஸவ்ரி அவர்களுக்கு யார் மூலம் இந்த செய்தி கிடைத்தது என்ற எந்த தகவலும் இல்லை. சுஃபயான் அஸ்ஸவ்ரி ஒரு தபா தாபியீ ஆவார். அதாவது ஸஹாபாக்களை கண்டவர்களை கண்டவர். இவர் யமாமா யுத்தம் நடைபெற்ற காலத்தை சார்ந்தவர் அல்ல. ஆக இந்த செய்தியை இவருக்கு அறிவித்தவர் யார் என்ற எந்த தகவலும் இல்லாத பட்சத்தில் இந்த செய்தி முன்கத்தீ (அறிவிப்பாளர் தொடர் முறித்த செய்தி) எனும் பலவீனமான ஹதீஸ் வகையை சார்ந்தாகும்.

    ஆதாரம் 4: குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறிய அல் ஜுஹ்ரி
            அல் ஜுஹ்ரி கூறியதாவது: இறங்கிய குர் ஆனின் பகுதிகளை மனனமிட்ட நபித்தோழர்கள் யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகள் எழுதப்படவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அது அதற்கு பிறகு அறியப்படவில்லை. அபூபக்ரோ, உமரோ , உஸ்மானோ அப்போது குர்ஆனை தொகுத்திருக்கவில்லை. அவ்வாறு காணாமல் போன பகுதிகள் அதனை மனனமிட்டவர்கள் மரணித்த பிறகு யாரும் அவற்றை கொண்டிருக்கவில்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது.எனவே என்னை பொறுத்தவரை, இதுவே அவர்களை, குர்ஆனை கவனிக்க செய்தது. நாட்டின் முஸ்லீம்களில், குர்ஆனின் குறிப்பிடப்படும்படியான பகுதியினை கொண்டிருந்த மனிதர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம்தான் கலிஃபா அபூபகர் அவர்களை குர்ஆனை ஒரே ஏடாக தொகுக்க செய்தது. ( அல் மஸாஹிஃப் 1/99)

                மேற்குறிபிட்ட செய்தியின் அடிப்படையில், யமாமாவில் குர்ஆன் காரிகள் இறந்து போனதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகள் முவைக்கும் வாதம். அதற்கான பதிலை காண்போம்.

    நமது பதில்: அல் ஜுஹ்ரியின் முர்ஸல் அறிவிப்பு
    ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ ﻭﻫﺐ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ ﻗﺎﻝ: «ﺑﻠﻐﻨﺎ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﺃﻧﺰﻝ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ، ﻓﻘﺘﻞ ﻋﻠﻤﺎﺅﻩ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ، اﻟﺬﻳﻦ ﻛﺎﻥﻭا ﻗﺪ ﻭﻋﻮﻩ ﻓﻠﻢ ﻳﻌﻠﻢ ﺑﻌﺪﻫﻢ ﻭﻟﻢ ﻳﻜﺘﺐ، ﻓﻠﻤﺎ ﺟﻤﻊ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ ﻭﻋﺜﻤﺎﻥ اﻝﻗﺮﺁﻥ ﻭﻟﻢ ﻳﻮﺟﺪ ﻣﻊ ﺃﺣﺪ ﺑﻌﺪﻫﻢ، ﻭﺫﻟﻚ ﻓﻴﻤﺎ ﺑﻠﻐﻨﺎ، ﺣﻤﻠﻬﻢ ﻋﻠﻰ ﺃﻥ ﻳﺘﺒﻌﻮا اﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻌﻮﻩ ﻓﻲ اﻟﺼﺤﻒ ﻓﻲ ﺧﻼﻓﺔ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺧﺸﻴﺔ ﺃﻥ ﻳﻘﺘﻞ ﺭﺟﺎﻝ ﻣﻦ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻓﻲ اﻟﻤﻮاﻃﻦ ﻣﻌﻬﻢ ﻛﺜﻴﺮ ﻣﻦ اﻝﻗﺮﺁﻥ،
        அல் ஜுஹ்ரி கூறியதாவது: இறங்கிய குர்ஆனின் பகுதிகளை மனனமிட்ட நபித்தோழர்கள் யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகள் எழுதப்படவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அது அதற்கு பிறகு அறியப்படவில்லை. அபூபக்ரோ, உமரோ , உஸ்மானோ அப்போது குர்ஆனை தொகுத்திருக்கவில்லை. அவ்வாறு காணாமல் போன பகுதிகள் அதனை மனனமிட்டவர்கள் மரணித்த பிறகு யாரும் அவற்றை கொண்டிருக்கவும்வில்லை,  யாரும் எழுதியிருக்கவும் இல்லை  என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. எனவே என்னை பொறுத்தவரை, இதுவே அவர்களை, குர்ஆனை கவனிக்க செய்தது. நாட்டின் முஸ்லீம்களில், குர்ஆனின் குறிப்பிடப்படும்படியான பகுதியினை கொண்டிருந்த மனிதர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம்தான் கலிஃபா அபூபகர் அவர்களை குர்ஆனை ஒரே ஏடாக தொகுக்க செய்தது. ( அல் மஸாஹிஃப் 1/99)
            இது முர்ஸல் செய்தி ஆகும். இப்னு ஸிஹாப் அல் ஜுஹ்ரி அவர்களுக்கு யார் மூலம் இந்த செய்தி கிடைத்தது என்ற எந்த தகவலும் இல்லை. அல் ஜுஹ்ரி அவர்கள், இறுதி தலைமுறை தாபியீ ஆவார். இவர் யமாமா யுத்தம் நடைபெற்ற காலத்தை சார்ந்தவர் அல்ல. ஆக இந்த செய்தியை இவருக்கு அறிவித்தவர் யார் என்ற எந்த தகவலும் இல்லாத பட்சத்தில் இந்த செய்தி முர்ஸல் எனும் பலவீனமான ஹதீஸ் வகையை சார்ந்தாகும்.
    الشافعي يقول: وإرسال الزهري ليس بشيء ذلك أن نجده يروي عن سليمان بن أرقم.

            ஷாஃபீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது மேலும் ஜுஹ்ரியின் இர்ஸால் (யார் தனக்கு அறிவித்தார் என்ற குறிப்பில்லாத செய்தி) என்பது ஒன்றும் இல்லாதது. அவர் அறிவிப்பது ஸுலைமான் இப்னு அர்கம் என்பவரின் அறிவிப்பு என்பது அறியப்பட்டுள்ளது.(ஸரஹ் இலல் திர்மிதீ 1/535)

           மேலும் ஸுலைமான் இப்னு அர்கம் பலவீனமானவர், கைவிடப்பட்டவர் ஆவார். (தக்ரீப் அல் தஹ்தீப் ப.எண்:249). மேலும் முன்சென்ற செய்தியை அறிவிக்கும்  ஸுஃப்யான் அஸ்ஸவ்ரியும் இவரது மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. (மீஸான் அல் இஹ்திதால் பாகம் 2)

            யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனமிட்ட பலர் கொல்லப்பட்டனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனால் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்பது மிகைப்படுத்தப்பட்ட பொய். குர்ஆனை மனனமிட்ட நபித்தோழர்களில் பலர் யமாமா யுத்தத்திற்கு பிறகு உயிருடன் இருந்தனர் என்பது குறிபிடத்தக்கது. மனாஹில் அல் இர்ஃபான் என்ற 1/242ல் முஹம்மத் அல் ஜுர்கானி அவர்கள் வேறுபட்ட பல ஹதீஸ்களை ஆய்வு செய்து நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பின்வரும் நபித்தோழர்கள் குர்ஆனை முழுமையாக கற்றிருந்தனர் என்று கூறுகிறார்.
    முஹாஜிர்களில் 1.அபூபகர் அஸ்ஸித்தீக்(ரலி), 2.உமர் இப்னு அல் கத்தாப்(ரலி), 3.உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), 4.அலி இப்னு அபீதாலிப்(ரலி), 5.ஹுதைஃபா(ரலி), 6.அபூஹுரைரா(ரலி), 7.அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 8.அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), 9.அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி), 10.அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி), 11.மூஆவியா(ரலி), 12.அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), 13.அப்துல்லாஹ் இப்னு ஸாயிப்(ரலி), 14.ஆயீஷா(ரலி), 15.ஹஃப்ஸா(ரலி), 16.உம்மு ஸலாமா(ரலி),
    அன்ஸாரிகளில், 17.உபை இப்னு கஅப்(ரலி, 18.முஆத் இப்னு ஜபல்(ரலி), 19.ஸைத் இப்னு ஸாபித்(ரலி),20.அபூ தர்தா(ரலி), 21.முஜம்மிஃ இப்னு ஹாரிஸா (ஜாரியா), 22.அனஸ் இப்னு மாலிக்(ரலி), 23.அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி).
                அபூ ஹுதைஃபா(ரலி) அவர்களது அடிமை ஸாலிம்(ரலி) அவர்களையும் இந்த வரிசையில் முஹம்மத் அல் ஜுர்கானி கூறியுள்ளார். ஆனால் அவர் யமாமாவில் கொல்லப்பட்டுவிட்டதால் அதை நாம் விட்டுவிட்டோம். ஏனையோர் அனைவரும் யமாமாவிற்கு பிறகே இறந்தவர்கள். இல்லாத கருத்துக்களையும், அட்ரஸ் இல்லாத அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்திகளையும் முன்னிறுத்தி குர்ஆனின் பகுதிகள் யமாமா போரில் காணாமல் போய்விட்டது என்று கூறுவது என்பதெல்லாம் ஃபோபியாவால் உருவான மிகைபடுத்தப்பட்ட பொய் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.....அல்லாஹு அஃலம்.