பக்கங்கள் செல்ல

Tuesday, November 20, 2018

தொடர் 2: பரிணாமம் : உண்மையா ஊகமா?

           அல்லாஹ்வின் திருப்பெயரால்


       நாம் நவீன பரிணாமம் குறித்து பார்ப்பதற்கு முன்பு பரிணாமத்திற்கு டார்வினிஸம் அல்லாத மாற்று பரிணாமவியல் கோட்பாடுகள் மற்றும் அதன் மறுப்பையும் சற்று பார்த்துவிடுவது நமக்கு பரிணாமவியலின் இன்றைய நவீன நிலைபாட்டை ஆய்வு செய்யவும் விமர்சிக்கவும் துணையாக இருக்கும். அந்த வரிசையில்  டார்வினஸத்திற்கு மாற்றாக கூறப்பட்ட கோட்பாடுகளில் லாமார்கிஸமும் ஒன்று. இந்த தொடரில் லாமார்க்கிஸம் குறித்தும் அதன் அறிவியல் மறுப்பு குறித்தும் பார்த்து விடுவோம் இன் ஷா அல்லாஹ்

லாமார்க்கிஸம்: சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்( Inheritance of acquired characters)

          லாமார்க் என்ற அறிஞர் 1809ம் ஆண்டு “சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்( Inheritance of acquired characters)” என்ற தனது கோட்பாட்டை முன்வைத்தார். அதாவது ஒரு உயிரின் குறிபிட்ட ஒரு உறுப்பின் பயன்பாட்டிற்கு ஏற்ப உயிரினங்களின் தலைமுறை தலைமுறையாக அந்த உறுப்பில் மாற்றங்கள் தோன்றும் என்ற கொள்கையை முன்வைத்தார். இதனை பெறப்பட்ட குணங்கள்( Acquired Characteristics) என்று உயிரியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெறப்பட்ட குணங்கள் என்பதை ஒரு உயிரின் வாழ்நாளில் சொமாடிக் செல்கள் (Somatic cells- விந்து மற்றும் கரு உள்ளிட்ட உயிரணு அல்லாத செல்கள்) ஏற்படும் மாற்றங்கள் என்று விளக்குகின்றனர் ஆய்வாளர்கள். உதாரணமாக இரும்பு அடிப்பவரின் கைகளில் இருக்கும் மாற்றங்கள் அடுத்த சந்ததியிலும் தொடரும் என்பது போன்ற கருத்தியல். இந்த உதாரணம் நகைப்புக்காக அல்ல ஆனால் லாமார்க்கின் கோட்பாடானது ( இப்போது அது ஹைப்போதீஸிஸ் – அறிவியல் யூகம் என்று அழைக்கப்படுகிறது) இத்தகைய மாற்றங்கள்தான் அடுத்தடுத்த சந்ததிகளில் கடத்தப்பட்டு பரிணாமம் தோன்றியது என்ற கருத்தை மூலமாக கொண்டிருக்கிறது. 


     இப்படித்தான் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டிருக்கும் என்ற லாமார்க்கின் யூகத்தைத்தான் பல இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த கருத்தானது டார்வினுடன் இணைத்துப்பேசப்படுவதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அதை பிறகு பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

        இந்த கோட்பாடானது 1809 முதல் 1930 களில் மரபியலாளர்களால் முழுமையாக மறுக்கப்பட்ட பிறகும் 1965 வரை கம்யூனிஸ சோவியத்தில் கோலோச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்கால அறிவியல் விந்து மற்றும் முட்டையில் தோன்றும் மரபியல் மாற்றங்களே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்ற உண்மையை நிறுவியுள்ளது. ஆக லாமார்க்கின் தத்துவம் அறிவியல் யூகமாக பரிணாமம் அடைந்துவிட்டது. (வரும் தொடர்களில் பரிணாமம் என்பது இந்த தத்துவம் போல்தான் கீழ் நோக்கிய பயணமாகத்தான் (Complex Organism to simple Organism) இருக்குமே தவிர மேல் நோக்கியதாய்(Simple Organism to Complex Organism) இருக்காது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவுவோம் இன் ஷா அல்லாஹ்) 

          ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த கருத்தின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது என்பது உண்மை. இந்த கோட்பாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் “இயற்கை தேர்வை” முன்னிறுத்திய டார்வினையும் இந்த கோட்பாடு விடவில்லை. டார்வின் தனது புத்தகமான “ The variation of Animals and Plants Under Domestication –Vol 2) இந்த கோட்பாட்டின் மையம் குறித்து “Provisional Hypothesis of Pangenesis” என்ற தலைப்பின்கீழ் பல யூகங்களை ( அறிவியல் யூகம் -Hypothesis என்பது உண்மைக்கு நிகரானது என்று பீலா விடும் நாத்திகர்கள் கவனிக்க)

     


        அதில் அவர் கூறும் போது ஒரு உயிரின் அனைத்து உறுப்புகளின் செல்களில் இருந்தும் “Gemmules” எனும் சிறு துகள்கள் உயிரணுக்கள் உற்பத்தி நிலையமான விந்துப்பை மற்றும் கருப்பையை அடைகின்றன. இதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும் பெறப்பட்ட குணங்கள் அதாவது சோமாட்டிக் செல்களில் தோன்றிய மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்ற யூகத்தை முன்வைத்தார். இதன் காரணத்தினாலேயே இன்றும் டார்வினின் தத்துவத்தை விமர்சிக்க முற்படும் அறிஞர்கள் லாமார்க்கின் இந்த தத்துவத்துடன் இணைத்து விமர்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாட்களில் இந்த “Pangenesis” கோட்பாட்டை நிறுவ முற்பட்ட ஃபிராண்சிஸ் கால்டனின் (Eugenics – இன ஆக்க மேம்பாட்டியலின் தந்தை. டார்வினின் நெருங்கிய உறவினர்) ஆய்வுகள் மண்ணை கவ்வின.

கால்டனின் ஆய்வுகள்:

          மாறுபட்ட நிறங்களுடைய முயல்களின் இரத்தத்தை நேரடியாக இரத்த நாளாங்களை இணப்பதின் மூலமும் இன்ன பிற முறைகளினாலும் வேறு நிறமுடைய முயல்களுக்கு மாற்றி பின்னர் அவற்றை இணப்பெருக்கம் செய்து அதன் சந்ததிகள் இரத்தம் பெறப்பட்ட முயல்களின் நிறத்தை கொண்டிருக்கிறதா என ஆய்வு செய்தார். கடைசியில் பல முயல்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சம் ஒரு முடிவும் ‘Pangenesis”ற்கு ஆதாரவாய் பெறமுடியவில்லை. ஆக நான் தான் ஆய்வில் ஏதோ தவறிழைத்துவிட்டேன் என கால்டன் தன்னை நொந்து கொண்டார். 



         அதற்கேற்றார் போல் டார்வினும் "இரத்தத்தின் வழியாக “GEMMULE” எடுத்துச்செல்லப்படுகிறதுனு நான் சொல்லவில்லையே" என கைவிரித்துவிட்டார். (ஆனால் கால்டன் முழு அளவிலான அறிவியல் ஆய்வாக அதை மேற்கொண்டார். அது டார்வினுக்குத்தான் தெரியாமல் போய்விட்டது ) அந்த அளவிற்கு டார்வின் மீதும் அவரது ஆய்வுகளின் மீது அதீத நம்பிக்கை. இவற்றிற்கு எல்லாம் இறுதி சமாதி கட்டும் பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ வைஸ்மேன் என்ற அறிஞர் ஏற்றுக்கொண்டார் போலும்........

வைஸ்மேன் ஆய்வுகளும் அதன் முடிவுகளும்:

           வைஸ்மேன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பரிணாமவியலாளர் ஆவார். இன்றிருக்கும் பரிணாம கொள்கையை வகுத்த ஏர்ண்ஸ்ட் மைரால்(Ernst Mayr) 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த பரிணாமவியலாளர் எனப் போற்றப்பட்டவர்.இவர் லாமார்க்கின் தத்துவத்தையும் டார்வினின் பேன்ஜேனிசிஸ் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தினார். தலைமுறை தலைமுறையாக எலிகளின் வாலை தொடர்ச்சியாக வெட்டினாலும் அடுத்தடுத்த தலைமுறைகளில் வாலானது தோன்றுவதை அறிந்த வைஸ்மேன் லாமார்க்கின் பெறப்பட்ட குணங்கள் என்ற கருத்தையும், இதன் மூலமாக கூறப்படும் பேன்ஜேனிஸிஸையும் மறுத்துவிட்டார். 

      அதாவது உயிரணுக்களில் (விந்து மற்றும் முட்டை) இருந்து தகவல் சொமாடிக் செல்களுக்கு பாயுமே தவிர சொமாடிக் செல்களில் இருந்து உயிரணுக்களுக்கு தகவல் பரிமாற்றம் நிகழ்வதில்லை என நிறுவினார். இன்னும் தெளிவாக கூறுவதென்றால் பாரம்பரிய குணங்கள் உயிரணுக்களில் இருந்து விந்து, முட்டை சேர்க்கையின் போது கருவின் (சொமாடிக் செல்களுக்கு) ஏனைய உடல் செல்களுக்கு செல்லுமே தவிர அதன் எதிர் திசையில் அதாவது உடலின் ஏனைய செல்களில் இருந்து விந்து மற்றும் கருமுட்டைக்கு தகவல் பரிமாற்றம் நடக்காது என நிறுவினார். அதே போல் இந்த தலைமுறையின் உயிரணுத்தகவலை அடுத்த தலைமுறையின் உயிரணுக்கள் தாங்கி நிற்கும். உதாரணமாக தொடர்ந்து சம்மட்டியை பயன்படுத்துவதால் இரும்படிப்படிப்பவரின் கையில் தோன்றும் மாற்றம் குறித்த தகவல் அவரது உயிரணுவான விந்தில் இருக்காது. அவரது குழந்தைகளின் உடலைமைப்பிற்கான தகவல் தந்தையின் விந்து மற்றும் தாயின் முட்டையில் இருக்கும் தகவலின் அடிப்படையிலேயே இருக்கும். அதுபோல குழந்தையின் உயிரணுக்கள் தந்தை மற்றும் தாயின் உயிரணுக்களின் தகவலை தாங்கி நிற்குமே தவிர தந்தை மற்றும் தாயின் உடல் செல்கள் அதாவது சோமாடிக் செல்களின் தகவலை கொண்டிருக்காது. ஆக தந்தையின் கைகளில் தோன்றிய மாற்றங்கள் அடுத்தடுத்த  தலைமுறைகளுக்கு கடத்தப்படாது. இவ்வாறு உடலின் சோமாடிக் செல்களுக்கும் உயிரணுக்களுக்கும் இடையே ஒரு தடுப்பு இருக்கிறது. இதனை இன்றைய அறிவியல் உலகம் வைஸ்மேன் தடுப்பு (Weismann Barrier) என அழைக்கிறது. இதுவே லாமார்க் மற்றும் டார்வினின் பேன்ஜெனிஸிஸ் ஆகிய கோட்பாடுகளுக்கு இறுதி முடிவாய் அமைந்தது. இவை இரண்டுக்கும் “உதவாத அறிவியல் யூகம்- hypothesis” என வைஸ்மேனால் முடிவுரை எழுதப்பட்டது.
       லாமார்கிஸம் அல்லாத சால்டேசன் அல்லது நவீன கால முயூடேசனிஸமும் நவீன டார்வினிஸத்தின் மாற்றாக கூறப்படுகிறது. ஆயினும் டார்வினிஸம் குறித்த விமர்சனப்பகுதியில் இது குறித்து விரிவாக காண்போம் இன் ஷா அல்லாஹ்.


Ref:

1.Adaptation and Natural selection, Evolution by Mark ridley
2. http://galton.org/hereditarian.html
3.The Growth of Biological Thought by Ernst Mayr    
4.The variation of Animals and Plants Under Domestication by Charles Darwin