பக்கங்கள் செல்ல

Wednesday, August 12, 2015

"குரானை அவமதித்து விட்டதாக" குண்டர்களால் கொல்லப்பட்ட ஆப்கான் சகோதரி. நடந்தது என்ன? சம்பவமும், படிப்பினையும்!


சில   மாதங்களுக்கு முன்னால் , ஆப்கானிஸ்தானில், ஒரு பெண் குரானை அவமதித்ததாக குண்டர்களால் கொல்லப்பட்டாள்.

இந்தியாவில், முஷாபர் நகரில் பொய்யான ஒரு வீடியோவின் காரணத்தால், பல பேர் கொல்லப்பட்டு, பல பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன.


முட்டாள்தனமும் , சுய சிந்தனையும், உண்மையான இறை நம்பிக்கையும்  இல்லாத மூடர்களால்/வெறியர்களால்  தான் இது போன்ற விளைவுகள்  ஏற்படும் என்பதற்கு இவைகள் சான்று.

முதல் சம்பவத்தில், இஸ்லாமிய சட்டம் பயின்ற அந்த பெண் துணிச்சலாக செய்தது, "தாவீஸ்" என்ற பெயரில் குரான் வசனங்களை எழுதி, அணிந்து வரும் மூட நம்பிக்கையை, அந்த தர்கா வாசலிலே எதிர்த்தது. அங்கு உள்ள தர்கா பொருப்புதாரியான ஜைனுதீன், ஆங்குள்ள  மக்களிடம், "இவள்  அமெரிக்காவின் ஏஜன்ட், குரானை அவமதித்து விட்டாள்",  என்று  திசை திருப்பிவிட்டான். இதை கேட்ட அந்த மூடர்கள் கூட்டம், அந்த சகோதரியை கொன்று விட்டது. (thanks:BBC)

இரண்டாவது சம்பவத்தில், எவனோ ஒரு ஹிந்து மத வெறியன், ஒரு வீடியோவை உண்மைக்கு மாறாக திசை திருப்பி, அபாண்டமாக ஒரு சமுதாயத்தின் மேல் வீண் பழி போட்டதால் ஏற்பட்ட விளைவு.

இதுபோன்று ஆயிரம் சம்பவங்கள் தினமும் நடந்து வருவதை நாம் பார்க்கின்றோம்.எதையும் சிந்திக்காமல், தன் மதம்/இனம்/மொழி/குடும்பம்/கட்சி   என்றவுடன், மூளையை கழற்றி விட்டு வெறிபிடித்து அலையும் கூட்டங்களால் தான் இந்த உலகம் அமைதியை இழந்து தவிக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில், ஒரு நேர்மையுள்ள மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகத் தெளிவான அணுகுமுறை, திருக்குரானிலே காணலாம். மத வேறுபாடு கடந்து, மனித நேயம் விரும்பும் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம் இது.

உங்களிடத்தில் ஒரு செய்தி வருகின்றது.. எப்படி வந்தாலும் சரியே...யார் சொன்னாலும் சரியே... அதை முதலில் 100 சதவீதம் உண்மையா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். அப்படியே ஏற்று அதன் காரணத்தால், மக்கள் பாதிப்புக்கு உள்ளானால், நீங்கள் தான் சட்டத்தின், மேலும் இறைவனின்  முன்பும் குற்றவாளி என்பதை இந்த வசனங்கள் மிகத்தெளிவாக சொல்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! ஒருவன்  (பொய்யன்/குற்றம் புரிபவன்) உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். [49:6]

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். [4:135]

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். [5:8]
வாழ்கையின் அன்றாட பிரச்சனைகளில், மற்றவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல, என்று நம்பிக்கையின்மையிலும், உண்மைக்கு புறம்பாக அடுத்தவர்களின் சொத்தை அனுபவிப்பதிலும் "வெற்றி" பெற்றதாக எண்ணி தன் இரு உலக வாழ்க்கையையும் அழித்துக்கொண்டு வரும் "பெயர்தாங்கி" முஸ்லிம்கள் இந்த வசனங்களை தினமும் படித்து தங்களை திருத்திக்கொள்வது நல்லது.

Ref: http://www.bbc.com/news/magazine-33810338