பக்கங்கள் செல்ல

Sunday, June 28, 2015

எதிர் தொடர் 16,17: வானவர்கள், மனிதர்கள், ஷைத்தான்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்

            
          இந்த தொடரில் நாம் மனித படைப்பின் ஆரம்பம் குறித்தும் அது குறித்து இந்த கட்டுரையாளரின் (1,2)புரிதல் குறித்தும் சிறிது நாம் அறிந்து கொள்வோம். மேலும் இந்த கட்டுரை  அதிக விளக்கம் தேவை படும் கட்டுரையாக இருப்பதால் இதனை முழுவதுமாக குற்றச்சாட்டு பதில் என்று அமைக்காமல் விளக்கம் அளிப்பதாகவும் இதற்கடுத்து இடம் பெறும் கட்டுரையின் அடித்தளமாகவும் அமைக்கவுள்ளேன். ஆக அவர் கூறும் குற்றச்சாட்டுகளை தலைப்பாகயிட்டு சில விளக்கங்கக்ளும் இதில் இடம்பெற வுள்ளது இன்ஷா அல்லாஹ்

மனிதனின் படைப்பு:
     ஏக இறைவன் அல்லாஹ் மனிதனின் படைப்பு குறித்து தனது திருமறையில் பின்வருமாறு ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறான். பொதுவாக அல்லாஹ் நபிமார்களின் வரலாறுகளை அல்குர்ஆனில் குறிப்பிடுவதற்கு காரணம் மனிதன் இதைகொண்டு படிப்பினை பெறுவதற்கு என்பதை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். 
        
     அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.( அல் குர்ஆன் 12:111)
         
   அல்லாஹ் நபிமார்களின் செய்திகளில் பல படிப்பினைகளை வைத்துள்ளான். ஆதம்(அலை) அவர்களது செய்தியும் அத்தகைய பாடத்தை உள்ளடக்கியது தான். அது குறித்து தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

          "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான்.( அல் குர் ஆன் 2:30)

படைப்பின் ரகசியம் குறித்து எப்படி வானவர்கள் அறிந்து கொண்டார்கள் :
   இந்த அத்தியாயத்தின்அடுத்தடுத்த வசனங்களில் இதற்கான விடை தெளிவாக உள்ளது . அதாவது வானவர்கள் தாங்கள் அறிந்த யாவற்றையும் கற்றுக்கொடுத்தது அல்லாஹ்தான் என்று கூறுகின்றனர். இதோ.
        "நீ தூயவன்.நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர் ஆன் 2:32).
   ஆதம் (அலை) அவர்களுக்கு கற்று கொடுத்ததும் அல்லாஹ்தான். வானவர்களுக்கு கற்றுகொடுத்ததும் அல்லாஹ்தான். அதனால் அல்லாஹ் எதை கற்று கொடுத்தானோ அதையே அவனிடம் தெரிவித்துள்ளனர், வானவர்கள். ஆனால் அவர்கள் உரையாடலுக்கு பதிலளிக்கும் விதமாகவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மேலே உள்ள செய்திகள் கூறுகின்றன. 

வானவர்களுக்கு பகுத்தறிவு உண்டா? 
   வானவர்கள் பகுத்தறிவு உடையவர்களாகத்தான் அல்லாஹ் படைத்துள்ளான். இதனை அல்லாஹ் தெளிவாக தனது திருமறையில் காட்டியுள்ளான். பின்வரும் இந்த உரையாடல் இப்ராஹிம்(அலை) அவர்களது மனைவிக்கும் , நற்செய்தி கொண்டு வந்த வானவர்களுக்கும் இடையே நடைபெற்றதாக அல்லாஹ் கூறுகிறான்:
      "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்'' என்று அவர் கூறினார்.  "அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும்.அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.(அல் குர் ஆன் 11: 72 ,73)
                இவ்வாறு வானவர்கள் உரையாட கூடியவர்களாக, சூழலை புரிந்து செயல் படும் மனிதனிடம்  சுய தேர்வுசெய்யும்( Freewill) ஆற்றலுடன் அல்லாஹ் படைத்துள்ளான் என்பது தெளிவாகிறது. ஆனால் அவர்கள் அறிவின் ஆற்றலில் ஒரு சிறு வேறுபாட்டை நம்மால் உணரவும் முடிகிறது. அதாவது சாரா அம்மையார் அவர்களுக்கு இவ்வளவு தெளிவாக பதிலளிக்க முடிந்தவர்கள் அல்லாஹ்வை முந்தி பேச முடியாதவர்களாக, அல்லாஹ்விற்கு தொடர்பான விஷயங்களில் சுய தேர்வு (freewill) செய்ய முடியாதவர்களாக படைக்கப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக ஆதம்(அலை) அவர்களது படைப்பின் சம்பவங்களையே எடுத்து கொள்ளுங்கள் ஆதம்(அலை) அவர்களுக்கு கற்று கொடுத்ததும் அல்லாஹ்தான். அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை படைக்கப்ப்டுவதாக கூறும்போது , ஆதம்(அலை) குறித்து கருத்தை கூற முடிந்தவர்கள்  ஆனால் அல்லாஹ் பொருடகளின் பெயரை கூற கட்டளையிட்ட போது அவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டார்களே தவிர  " யா அல்லாஹ்; நீ கற்று கொடுத்தால் நாங்களுக்  கூறியிருப்போம் "என்று கூறவில்லை. இந்த வானவர்களின் தன்மையை  அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

"அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் .( அல் குர்ஆன் 21:26)
     மனிதன் சுய தேர்ச்சி உடையவனாக படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ்வின் கட்டளை என்று அறிந்த பின்பும் மீறக்கூடியவானாக படைக்கப்பட்டுள்ளான்.  ஆனால் வானவர்களின் சுய தேர்ச்சி செய்யும் அளவில்( degree of Freewill) மனிதனுடன் ஒப்பிடும் போது வேறுபாடு உடையவர்களாக அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிபட்டவர்களாக படைத்துள்ளான். மனிதர்களுக்கு தேவையான அளவு, அல்லாஹ் வானவர்கள் பற்றி தன் திருமறையில் அறிவித்துள்ளான். அவ்வளவே. ஆனால் இதில் ஒரு பாடத்தையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் அதாவது இந்த கட்டுரையாளர் கூறுவது போல அல்லாஹ் வானவர்களுக்கு உணர்த்த எண்ணினான் என்பது போல் அல்லாமல் மனிதனின் சுய தேர்ச்சியின் சிறப்பை பூமியில் இறக்கப்படும் முன் ஆதம் (அலை) அவர்களுக்கு சுட்டி காட்டுவதுதான். மேலும் இதே அத்தியாயத்தின் அடுத்தடுத்து இடம் பெறும் வசனங்கள் மனிதனின் சுய தேர்வின் பாதகத்தை விளக்குவதாய் உள்ளது குறிப்பிட தக்கது. மேலும் வானவர்கள் சுயதேர்வின் அளவில்தான் வேறுபடுகிறார்களே தவிர இவர் கூறுவது போல் பகுத்தறிவே இல்லாத இயந்திரம் என்பது தவறான புரிதல். சுயதேர்ச்சியில் வேறுபாடு உள்ளதால் பகுதறிவற்றவர்கள் என்று எண்ணுவது சரியான கருத்தல்ல. உதாரணமாக நமக்கும் விளங்குகளுக்கும் பகுத்தறிவு வேறுபடுகிறது என்பதுதான் சரியானது. அவை பகுத்தறிவே அற்றவை என்பது சரியானதல்ல. அப்படி இருந்ததிருத்தால் மற்ற விலங்குகளிடம் இருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்கின்றன? அதேபோல் மனிதனின் சுயதேர்ச்சிக்கும்  விளங்குகளின் சுயதேர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. ஆக சுயதேர்ச்சியையும் பகுத்தறிவையும் ஒன்றாய் கட்டுரையாளர் குழப்பி கொண்டதின் விளைவு வானவர்களை இயந்திரமாக எண்ணுவது.

யார் இந்த இப்லீஸ்?
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.( அல் குர் ஆன் 2:34) 
          மேற்குறிப்பிட்ட வசனம் அல்லாஹ் வானவர்களை பணிய கூறியதாகவும், இப்லீஸ் ஏன் பணியவில்லை என்று அல்லாஹ் கேட்பது என்பது தவறான ஒன்று என்று கட்டுரையாளர் கூறுகிறார். பணிய கூறப்பட்டவர்கள் வான்வர்கள் , ஜின் இனத்தை சார்ந்த இப்லீஸிடம் ஏன் பணியவில்லை என்று கேட்பது முரண்பாடு இல்லையா? என்று கட்டுரையாளர் கேட்கிறார். இது அரபிய மொழியின் பேச்சு வழக்கில் உள்ள ஒரு முறையாகும். இதை தக்லிபா( ஒன்றை விட ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்) என்று கூறுவார்கள். இவ்வாறு இருகூட்டத்தினர் இருக்கையில் ஒரு கூட்டத்தினரை மட்டும் அழைத்து கட்டளை பிறப்பித்தால் இரண்டு கூட்டத்தினருக்கும் அந்த கட்டளை பொருந்தும் . இது குறித்து WILLIAM WRIGHT அரபிய இலக்கணம் குறித்த நூலில் விளக்கியுள்ளார். இருவரில் ஒருகூட்டத்தினரின் முக்கியத்துவம், எண்ணிக்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு பேச்சு வழக்கில் பயன்படுத்தும் முறைதான் தக்லிபா ஆகும். இது அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஒரு முறைதான். உதாரணமாக பெற்றோர்களும் காப்பாளர்களும் உள்ள ஒரு சபையில் "பெற்றோர்களே வருக வருக" என்று வரவேற்கிறார்கள் என்றால் அது காப்பாளர்களுக்கும் பொருந்தும். இதே போன்ற முறைதான் அந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபியர்கள் இன்னும் அதிக இடங்களில் இதை பயன்படுத்துகின்றனர் என்பதற்கு பல உதாரணங்களை WILLIAM WRIGHT தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு இவரது இந்த கேள்வி கூட இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளத்தில் இருந்து சுட்டதுதான். இன்னும் அவர்கள் தக்லிபா குறித்தும் பல கேள்விகளை பதிந்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் DR. ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த உதாரணத்திற்கு பதிலாக உள்ளதே தவிர தக்லிபா என்ற முறையே அரபியில் இல்லை என்பதை நிறுபிப்பதாக இல்லை. அதனால் தான் WILLIAM WRIGHT அவர்களது நூலை REFERENCE ஆக குறிபிட்டுள்ளேன்.

இப்லீஸின் உள்ளத்தை அல்லாஹ்வால் அறிய முடியவில்லையா?
"இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?'' என்று (இறைவன்) கேட்டான். "கருப்புக் களிமண்ணில் இருந்து - மணல் கலந்த களிமண்ணில் இருந்து - நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை'' என்று அவன் கூறினான்.(அல்குர்ஆன் 15: 32-33)
இங்கு அல்லாஹ் இப்லீஸிடம் அறிந்து கொள்ள கேட்டான் என்பது தவறான புரிதல் ஆகும். கேட்கப்படுபவர் தனது செயல் குறித்து தானே கூற கேட்கப்படும் கேள்வி. இவ்வாறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு அப்படிதான் பொருள்கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானதாகும் (பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர் 20:17 க்கான விளக்கம்) . இது போன்ற நடைமுறை அனைத்து மொழிகளிலும் உள்ள ஒன்றுதான். தவறிழைத்த குழந்தையிடம் அதன் தவறை அதையே சொல்ல கேட்பது போன்றது. இவர் பூமியின் வடிவம் குறித்த கட்டுரையில் அவர் அரபு மொழி அறிந்தவர் அல்ல என்று கூறியிருந்தார். ஆனால் இவரது கேள்விகள் இவரது தாய் மொழியில் கூட விபரமற்றவர் என்பதைப் போன்று தோன்றுகிறது. 

சஜ்தா என்பதின் பொருள் என்ன?
وَإِذْ قُلْنَا لِلْمَلائِكَةِ اسْجُدُوا لآدَمَ فَسَجَدُوا إِلا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (٣٤)

 "ஆதமுக்குப் பணியுங்கள்!''¹¹ என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல் குர்ஆன்: 2:34.)

இந்த வசனத்தில் இடம்பெறும் சஜ்தா என்ற சொல்லிற்கு பணிதல் என்று பொருளாகும். பொதுவாக இஸ்லாம் தொழுகை குறித்து கூறுவதற்கு முன்பும் சஜ்தா என்ற சொல் அரபியில் இருக்கத்தான் செய்தது அதற்கு பணிதல் கட்டுப்படுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது (Refer : Lanes Lexicon vol 4 p.no 1307) . ஆக சஜ்தா என்பதற்கு தலைவணங்குதல் என்ற பொருள் மட்டும் அல்ல என்பதை அகராதி காட்டுகிறது. குர் ஆனும் இந்த வேர்சொல் அமைந்த இடங்களில் எல்லாம் இதே பொருளை தரவில்லை. உதாரணமாக அல்குர் ஆன் 22:18 வசனத்தை எடுத்துக்கொள்வோம்.



 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ (١٨)

 "வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.(அல் குர் ஆன் 22:18)

இந்த வசனத்தில் மலைகளும், மரங்களும் சஜ்தா செய்வதாக உள்ளது. இதற்கு பணிகின்றன என்ற பொருள்தான் தர முடியும். பணிதல் என்பது கட்டுப்படுதல் என்று 2: 34 வசனத்திற்கு பொருள் தந்தால் எந்த விதத்திலும் இஸ்லாமிய நம்பிக்கையை பாதிக்காது. இன்றும் வானவர்கள் மனிதனுக்கு பணிவிடை செய்வோராகத்தான் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளை மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்பதுதான். அதன் விளைவாக இன்று மனிதன் தீய காரியங்களில் ஈடுபட்டாலும் அவனை பாதுகாக்கும் வானவர்கள் அவனை பாதுகாக்கின்றனர். ஆக இந்த கட்டுரையாளாரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இது விஷயத்தில் இவரது தவறான புரிதல் அல்லது காழ்புணர்ச்சியால் உருவானது என்பது தெளிவு.

அல்லாஹ் எதை ஆதமுக்கு கற்றுகொடுத்தான்

 وَعَلَّمَ آدَمَ الأسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (٣١)

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.(அல் குர்ஆன்  2:31)

அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களுக்கு அனைத்தின் பெயரையும் கற்று கொடுத்ததாக மேலுள்ள வசனம் கூறுகிறது. ஆனால் அஃறினைகளின் பெயரை மற்றும் அல்லாஹ் கற்று கொடுத்தான் என்பது கதையாசிரியரின் இடைச்சொருகள். அடுத்ததாக ஆக அதம் (அலை) அவர்களுக்கு ஆட்சி என்றால் என்ன என்பதையும் கற்று கொடுத்துள்ளான், உயிருள்ளது எது உயிரற்றது எது என்று அனைத்தும் அல்லாஹ் கற்றுகொடுத்தான் என்றுதான் அந்த வசனத்திற்கு பொருள். அடுத்ததாக் யாரை ஆதம்(அலை) அவர்கள் ஆட்சி செய்ய விரும்பினார்கள் என்று ஒரு கேள்வியை கட்டுரையாளர் முன்வைக்கிறார்.


 فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لا يَبْلَى (١٢٠)

 அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) (அல் குர் ஆன் 20:120)
 இவ்வசனத்தில்  இடம் பெறும் وَمُلْكٍ لا يَبْلَى என்பதற்கு அழிவில்லா உடைமை  அல்லது உரிமை என்பதுதான் பொருளாகும். இதில் இடம் பெறும் முல்க் - உடைமை ,உரிமை((Refer : Lanes Lexicon Supplement) என்று பொருள் உண்டு. நிரந்தரமாக நிலை பெற்று விடுவீர்கள் என்பதைதான் அந்த வசனம் குறிக்கிறது. இதோ அந்த கருத்தை தெளிவாக கூறும் வசனம்.

            அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.(அல் குர்ஆன் 7:20)


       ஆக அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யானது என்று ஷைத்தான் கூறுகிறான். அதைதான் அல்லாஹ் சூழ்ச்சி எங்கிறான். அடுத்ததாக ஷைத்தானை மன்னிக்க ஏனோ அல்லாஹ்விற்கு மனம் இல்லை என்று கட்டுரையாளர் புலம்புகிறார். ஷைத்தான் தலைகணம் கொண்டு தன்னை மன்னிக்க எந்த இடத்திலும் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவில்லை. ஆகவே அவன் மன்னிக்கப்படவில்லை.
                 அடுத்ததாக ஆதம்(அலை) அவர்கள் மன்னிப்பு கேட்க முஹம்மது(சல்) அவர்களது பெயரை பயன் படுத்தியதாக கூறப்படும் செய்திகள் ஹாக்கிம் பைஹகீ போன்ற நூல்களில் இடம் பெறுகிறது ஆயினும் இதில் இடம் பெறும் பல அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள். அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லாம், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஃபிஹ்ரி போன்ற வர்கள் இடம் பெறுவதால் இது பலவீன்மான செய்தியாகும். அதே போன்று நபி(சல்) அவர்களை படைக்கவில்லை என்றால் இந்த உலகத்தை படைத்திருக்க மாட்டேன் என்ற செய்தியையும் குறிப்பிட்டு சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த செய்திகளும் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அம்ர் இப்னு அவ்ஸ் அல் அன்ஷாரி என்ற அறிவிப்பாளர் இட்டுகட்ட கூடியவர் என்று தஹபி போன்ற ஹதீஸ்கலை வல்லுனர்களால் விமர்சிக்கப்பட்டவர்இதன் பிறகு கட்டுரையாளர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அது குறித்து விதி குறித்த அடுத்த தொடரில் காணலாம். இன்ஷா அல்லாஹ்....
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

Wednesday, June 10, 2015

Evolution St(he)ory > Harry Potter Stories - II ஹாரிபாட்டர் கதையை மிஞ்சும் பரிணாமம் தொடர் - 02


 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42
பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். 
இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். 
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான். 
இப்போது பதிவிற்கு செல்வோம்....

உயிரியல் பரிணாமம் என்றால் என்ன? 

ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன்.

What is the definition of Evolution? or Define Evolution?

பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.  

"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!

இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.  
விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?  

1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,   
"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.   
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary

இந்த விளக்கம் சரியா? தவறா? 

உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...
Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது  மன்னிக்க முடியாததாம்.  

"This is inexcusable for a dictionary of science" - Talk Origins
அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம். 
"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins
இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள், 
  • ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்? 
  • இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா? 
  • அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?  
  • இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி? 
  • இல்லை, Talk Origins தளம் தவறா?   

தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள். 
Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம். 
"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's    
நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து  பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.   
"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318. 
இப்போது நம்முள் எழும் சில கேள்விகள், 
  • எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன? 
  • ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா? 

அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன? 

இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?


2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்? 
"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986. 
மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால், 
"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website   
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)
நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர்.

அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது, 

"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997. 
இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்,  Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர். 

"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" -  Lawrence A. Moran
ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு. 
இது என்ன குழப்பம்? 
இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,
  •  Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?  
  • இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு? 

ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா? 
இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? 
அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள். 


ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins   

அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
  • பரிணாமம் என்ற oncept க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? 
  • ஏன் சரியாக விளக்க முடியவில்லை? 
  • அவர்களுக்கே புரியவில்லையா? 

புரியாத புதிர்தான்...


ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது?..................

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.   
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to: 
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran.

Source of Information: 
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html

References: 
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198

நன்றி தோழர்: ஆஷிக் அஹமது

Evolution St(he)ory > Harry Potter Stories - I ஹாரிபாட்டர் கதையை மிஞ்சும் பரிணாமம் தொடர் - 01

 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


நிச்சயமாக இந்த தலைப்பு மிகைப்படுத்தப் பட்டதல்ல...

ஆம். பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மிகச் சிறந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அதை உணர்ந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்
பரிணாமம் குறித்த இந்த தொடர் பதிவுகளின் நோக்கம், தலைப்பை நியாயப்படுத்துவது தான்.
"This is one of the worst cases of scientific fraud. It’s shocking to find that somebody one thought was a great scientist was deliberately misleading. It makes me angry"
"மோசமான அறிவியல் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறந்த விஞ்ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் வேண்டுமென்றே இப்படி செய்தது அதிர்ச்சியை தருகிறது. என்னை இது கோபப்பட வைக்கிறது"      

இது, "The Times" நாளிதழில் 11th August, 1997ல் ஒரு பிரபல பரிணாமவியலாளர் குறித்து வெளிவந்த செய்தி. பரிணாமத்திற்கு ஆதரவாக அவர் எடுத்து வைத்த ஆதாரம் மிகப் பெரிய பித்தலாட்டம் என்று தெரிய வந்த போது வெளியானச் செய்தி.

நீங்கள் பரிணாமத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இது போன்ற பித்தலாட்டங்களை, மோசடிகளை, பொய் புரட்டுக்களை பார்க்கலாம். 

இவ்வளவு ஏன்? ஒரு பரிணாமவியலாளர் அவர் செய்த மோசடி அம்பலப்படுத்த பட்ட போது என்ன தெரியுமா கூறினார்?, நான் மட்டுமா இப்படி செய்தேன். இதற்கு முன் இது போன்றவற்றை விஞ்ஞானிகள் செய்ததில்லையா? என்று கேட்டு அதிர்ச்சியை உண்டாக்கினார்.             
யார் இவர்கள்? இவர்கள் செய்த பித்தலாட்டங்கள் என்னென்ன?, இது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதும் இந்த பதிவுகளின் மற்றொரு நோக்கம். இன்ஷா அல்லாஹ்...  


இந்த பதிவுகள் யாருக்கு உபயோகமாக இருக்கப் போகின்றன (இன்ஷா அல்லாஹ்)? 
யாருக்கென்றால், அவர்கள் பரிணாமவியலை நம்புபவர்கள். அதே சமயம், தெளிவான, நியாயமான, அறிவியல் பூர்வமான வாதங்கள் பரிணாமவியலுக்கு எதிராக வைக்கப்பட்டால், அதனை நிராகரிக்காமல் பரிசீலிப்பார்கள். அவர்கள் தான் இந்த பதிவுகளின் இலக்கு.   
பரிணாமத்தை நம்பாதவர்களுக்கு பரிணாமம் குறித்த அவர்களது கருத்துக்களை இந்த பதிவுகள் மேலும் வலுப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ். 
இந்த பதிவுகளை அப்படியே நம்பாமல், இது சரியா என்று நீங்கள் ஆராயுங்கள். அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ்.

"இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டாம்" --- குர்ஆன் 5:2        

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


நன்றி: தோழர் ஆஷிக் அஹமது

தொடரும்..........