பக்கங்கள் செல்ல

cross tab2

Tuesday, November 20, 2018

தொடர் 2: பரிணாமம் : உண்மையா ஊகமா?

           அல்லாஹ்வின் திருப்பெயரால்


       நாம் நவீன பரிணாமம் குறித்து பார்ப்பதற்கு முன்பு பரிணாமத்திற்கு டார்வினிஸம் அல்லாத மாற்று பரிணாமவியல் கோட்பாடுகள் மற்றும் அதன் மறுப்பையும் சற்று பார்த்துவிடுவது நமக்கு பரிணாமவியலின் இன்றைய நவீன நிலைபாட்டை ஆய்வு செய்யவும் விமர்சிக்கவும் துணையாக இருக்கும். அந்த வரிசையில்  டார்வினஸத்திற்கு மாற்றாக கூறப்பட்ட கோட்பாடுகளில் லாமார்கிஸமும் ஒன்று. இந்த தொடரில் லாமார்க்கிஸம் குறித்தும் அதன் அறிவியல் மறுப்பு குறித்தும் பார்த்து விடுவோம் இன் ஷா அல்லாஹ்

லாமார்க்கிஸம்: சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்( Inheritance of acquired characters)

          லாமார்க் என்ற அறிஞர் 1809ம் ஆண்டு “சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்( Inheritance of acquired characters)” என்ற தனது கோட்பாட்டை முன்வைத்தார். அதாவது ஒரு உயிரின் குறிபிட்ட ஒரு உறுப்பின் பயன்பாட்டிற்கு ஏற்ப உயிரினங்களின் தலைமுறை தலைமுறையாக அந்த உறுப்பில் மாற்றங்கள் தோன்றும் என்ற கொள்கையை முன்வைத்தார். இதனை பெறப்பட்ட குணங்கள்( Acquired Characteristics) என்று உயிரியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெறப்பட்ட குணங்கள் என்பதை ஒரு உயிரின் வாழ்நாளில் சொமாடிக் செல்கள் (Somatic cells- விந்து மற்றும் கரு உள்ளிட்ட உயிரணு அல்லாத செல்கள்) ஏற்படும் மாற்றங்கள் என்று விளக்குகின்றனர் ஆய்வாளர்கள். உதாரணமாக இரும்பு அடிப்பவரின் கைகளில் இருக்கும் மாற்றங்கள் அடுத்த சந்ததியிலும் தொடரும் என்பது போன்ற கருத்தியல். இந்த உதாரணம் நகைப்புக்காக அல்ல ஆனால் லாமார்க்கின் கோட்பாடானது ( இப்போது அது ஹைப்போதீஸிஸ் – அறிவியல் யூகம் என்று அழைக்கப்படுகிறது) இத்தகைய மாற்றங்கள்தான் அடுத்தடுத்த சந்ததிகளில் கடத்தப்பட்டு பரிணாமம் தோன்றியது என்ற கருத்தை மூலமாக கொண்டிருக்கிறது. 


     இப்படித்தான் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டிருக்கும் என்ற லாமார்க்கின் யூகத்தைத்தான் பல இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த கருத்தானது டார்வினுடன் இணைத்துப்பேசப்படுவதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அதை பிறகு பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

        இந்த கோட்பாடானது 1809 முதல் 1930 களில் மரபியலாளர்களால் முழுமையாக மறுக்கப்பட்ட பிறகும் 1965 வரை கம்யூனிஸ சோவியத்தில் கோலோச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்கால அறிவியல் விந்து மற்றும் முட்டையில் தோன்றும் மரபியல் மாற்றங்களே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்ற உண்மையை நிறுவியுள்ளது. ஆக லாமார்க்கின் தத்துவம் அறிவியல் யூகமாக பரிணாமம் அடைந்துவிட்டது. (வரும் தொடர்களில் பரிணாமம் என்பது இந்த தத்துவம் போல்தான் கீழ் நோக்கிய பயணமாகத்தான் (Complex Organism to simple Organism) இருக்குமே தவிர மேல் நோக்கியதாய்(Simple Organism to Complex Organism) இருக்காது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவுவோம் இன் ஷா அல்லாஹ்) 

          ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த கருத்தின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது என்பது உண்மை. இந்த கோட்பாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் “இயற்கை தேர்வை” முன்னிறுத்திய டார்வினையும் இந்த கோட்பாடு விடவில்லை. டார்வின் தனது புத்தகமான “ The variation of Animals and Plants Under Domestication –Vol 2) இந்த கோட்பாட்டின் மையம் குறித்து “Provisional Hypothesis of Pangenesis” என்ற தலைப்பின்கீழ் பல யூகங்களை ( அறிவியல் யூகம் -Hypothesis என்பது உண்மைக்கு நிகரானது என்று பீலா விடும் நாத்திகர்கள் கவனிக்க)

     


        அதில் அவர் கூறும் போது ஒரு உயிரின் அனைத்து உறுப்புகளின் செல்களில் இருந்தும் “Gemmules” எனும் சிறு துகள்கள் உயிரணுக்கள் உற்பத்தி நிலையமான விந்துப்பை மற்றும் கருப்பையை அடைகின்றன. இதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும் பெறப்பட்ட குணங்கள் அதாவது சோமாட்டிக் செல்களில் தோன்றிய மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்ற யூகத்தை முன்வைத்தார். இதன் காரணத்தினாலேயே இன்றும் டார்வினின் தத்துவத்தை விமர்சிக்க முற்படும் அறிஞர்கள் லாமார்க்கின் இந்த தத்துவத்துடன் இணைத்து விமர்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாட்களில் இந்த “Pangenesis” கோட்பாட்டை நிறுவ முற்பட்ட ஃபிராண்சிஸ் கால்டனின் (Eugenics – இன ஆக்க மேம்பாட்டியலின் தந்தை. டார்வினின் நெருங்கிய உறவினர்) ஆய்வுகள் மண்ணை கவ்வின.

கால்டனின் ஆய்வுகள்:

          மாறுபட்ட நிறங்களுடைய முயல்களின் இரத்தத்தை நேரடியாக இரத்த நாளாங்களை இணப்பதின் மூலமும் இன்ன பிற முறைகளினாலும் வேறு நிறமுடைய முயல்களுக்கு மாற்றி பின்னர் அவற்றை இணப்பெருக்கம் செய்து அதன் சந்ததிகள் இரத்தம் பெறப்பட்ட முயல்களின் நிறத்தை கொண்டிருக்கிறதா என ஆய்வு செய்தார். கடைசியில் பல முயல்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சம் ஒரு முடிவும் ‘Pangenesis”ற்கு ஆதாரவாய் பெறமுடியவில்லை. ஆக நான் தான் ஆய்வில் ஏதோ தவறிழைத்துவிட்டேன் என கால்டன் தன்னை நொந்து கொண்டார். 



         அதற்கேற்றார் போல் டார்வினும் "இரத்தத்தின் வழியாக “GEMMULE” எடுத்துச்செல்லப்படுகிறதுனு நான் சொல்லவில்லையே" என கைவிரித்துவிட்டார். (ஆனால் கால்டன் முழு அளவிலான அறிவியல் ஆய்வாக அதை மேற்கொண்டார். அது டார்வினுக்குத்தான் தெரியாமல் போய்விட்டது ) அந்த அளவிற்கு டார்வின் மீதும் அவரது ஆய்வுகளின் மீது அதீத நம்பிக்கை. இவற்றிற்கு எல்லாம் இறுதி சமாதி கட்டும் பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ வைஸ்மேன் என்ற அறிஞர் ஏற்றுக்கொண்டார் போலும்........

வைஸ்மேன் ஆய்வுகளும் அதன் முடிவுகளும்:

           வைஸ்மேன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பரிணாமவியலாளர் ஆவார். இன்றிருக்கும் பரிணாம கொள்கையை வகுத்த ஏர்ண்ஸ்ட் மைரால்(Ernst Mayr) 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த பரிணாமவியலாளர் எனப் போற்றப்பட்டவர்.இவர் லாமார்க்கின் தத்துவத்தையும் டார்வினின் பேன்ஜேனிசிஸ் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தினார். தலைமுறை தலைமுறையாக எலிகளின் வாலை தொடர்ச்சியாக வெட்டினாலும் அடுத்தடுத்த தலைமுறைகளில் வாலானது தோன்றுவதை அறிந்த வைஸ்மேன் லாமார்க்கின் பெறப்பட்ட குணங்கள் என்ற கருத்தையும், இதன் மூலமாக கூறப்படும் பேன்ஜேனிஸிஸையும் மறுத்துவிட்டார். 

      அதாவது உயிரணுக்களில் (விந்து மற்றும் முட்டை) இருந்து தகவல் சொமாடிக் செல்களுக்கு பாயுமே தவிர சொமாடிக் செல்களில் இருந்து உயிரணுக்களுக்கு தகவல் பரிமாற்றம் நிகழ்வதில்லை என நிறுவினார். இன்னும் தெளிவாக கூறுவதென்றால் பாரம்பரிய குணங்கள் உயிரணுக்களில் இருந்து விந்து, முட்டை சேர்க்கையின் போது கருவின் (சொமாடிக் செல்களுக்கு) ஏனைய உடல் செல்களுக்கு செல்லுமே தவிர அதன் எதிர் திசையில் அதாவது உடலின் ஏனைய செல்களில் இருந்து விந்து மற்றும் கருமுட்டைக்கு தகவல் பரிமாற்றம் நடக்காது என நிறுவினார். அதே போல் இந்த தலைமுறையின் உயிரணுத்தகவலை அடுத்த தலைமுறையின் உயிரணுக்கள் தாங்கி நிற்கும். உதாரணமாக தொடர்ந்து சம்மட்டியை பயன்படுத்துவதால் இரும்படிப்படிப்பவரின் கையில் தோன்றும் மாற்றம் குறித்த தகவல் அவரது உயிரணுவான விந்தில் இருக்காது. அவரது குழந்தைகளின் உடலைமைப்பிற்கான தகவல் தந்தையின் விந்து மற்றும் தாயின் முட்டையில் இருக்கும் தகவலின் அடிப்படையிலேயே இருக்கும். அதுபோல குழந்தையின் உயிரணுக்கள் தந்தை மற்றும் தாயின் உயிரணுக்களின் தகவலை தாங்கி நிற்குமே தவிர தந்தை மற்றும் தாயின் உடல் செல்கள் அதாவது சோமாடிக் செல்களின் தகவலை கொண்டிருக்காது. ஆக தந்தையின் கைகளில் தோன்றிய மாற்றங்கள் அடுத்தடுத்த  தலைமுறைகளுக்கு கடத்தப்படாது. இவ்வாறு உடலின் சோமாடிக் செல்களுக்கும் உயிரணுக்களுக்கும் இடையே ஒரு தடுப்பு இருக்கிறது. இதனை இன்றைய அறிவியல் உலகம் வைஸ்மேன் தடுப்பு (Weismann Barrier) என அழைக்கிறது. இதுவே லாமார்க் மற்றும் டார்வினின் பேன்ஜெனிஸிஸ் ஆகிய கோட்பாடுகளுக்கு இறுதி முடிவாய் அமைந்தது. இவை இரண்டுக்கும் “உதவாத அறிவியல் யூகம்- hypothesis” என வைஸ்மேனால் முடிவுரை எழுதப்பட்டது.
       லாமார்கிஸம் அல்லாத சால்டேசன் அல்லது நவீன கால முயூடேசனிஸமும் நவீன டார்வினிஸத்தின் மாற்றாக கூறப்படுகிறது. ஆயினும் டார்வினிஸம் குறித்த விமர்சனப்பகுதியில் இது குறித்து விரிவாக காண்போம் இன் ஷா அல்லாஹ்.


Ref:

1.Adaptation and Natural selection, Evolution by Mark ridley
2. http://galton.org/hereditarian.html
3.The Growth of Biological Thought by Ernst Mayr    
4.The variation of Animals and Plants Under Domestication by Charles Darwin


Thursday, November 15, 2018

தொடர் 1: பரிணாமம் உண்மையா ஊகமா?

  அல்லாஹ்வின் திருப்பெயரால்........


 பரிணாமம் டார்வினுக்கு முன்

            பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். இன்ஷா அல்லாஹ் அதன் வரலாறு குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு பரிணாமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பரிணாமம் என்றால் என்ன?
          பரிணாமம் (Evolution) என்பதற்கு மாற்றம் என்பது நேரடி பொருளாகும். ஒரு உயிரினத்தின் தலைமுறை தலைமுறையாக வடிவம், நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றமே பரிணாமம் என எளிமையாக பொருள்படுத்தலாம். ஒரு உயிரினத்தின் அனைத்து நிலையிலும் அதாவது டி.என்.ஏ(DNA) வில் துவங்கி சமூக நடத்தை ஆகிய அனைத்திலும் பரிணாமம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பரிணாமவியலாளர்கள் கூறுகின்றனர். சமிபத்தில் ஹாரிசன் (2001) பரிணாமம் என்பது காலந்தோறும் மாறுபாட்டுடனான சந்ததி வழியாக ஏற்படும் மாற்றம் என வரையறுக்கிறார். (1)

பரிணாம காலவரிசை ஒரு பார்வை
         
               பரிணாமவியல் பல நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் பல பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது. அதனை முன்மொழிந்தவர்களில் சில குறிப்பிடத்தகுந்த நமது ஆய்விற்கு தேவை படுபவற்றை மட்டுமே மேலோட்டமாக காணவிருக்கிறோம். 
      கிரேக்க தத்துவவியலாளர் ஆன தேல்ஸ் உயிரினங்கள் நீரில் இருந்து தோன்றி படிப்படியாக பல்கிப்பெருகின என்ற கருத்தை முன்வைத்தார்.  அனாக்ஸிமெண்டர் இன்றைய பரிணாமவியலின் தந்தை என்று கூறலாம். அவர்தான் உயிர்கள் படிநிலைகளில் ஈரப்பதத்தில் இருந்து தோன்றுகின்றன.  
          மேலும் மனிதன் வேறு ஒரு உயிரினத்தில் இருந்து பரிணமித்தவன் என்ற கருத்தை முன்வைத்தார். 
இதுபோல் எம்படோக்ல்ஸ், எபிக்கூயூரியஸ் போன்றவர்களின் வாதங்களின் வேர்களையும் டார்வினின் தத்துவங்களில் காணமுடியும். இவ்வாறு உயிரினங்களில் தோன்றும் மாற்றங்கள் யாவும் எதேச்சையானவை, எதுவும் முன் நிர்ணயிக்கப்பட்டதில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இன்றிருக்கும் பரிணாமவியலாளர்கள் கூறுவது போல் மாற்றங்கள் யாவும் வருங்கால பயன் நோக்கியதல்ல என்ற கருத்தை அக்கால கிரேக்க தத்துவ்வியாளர்களில் ஒரு பகுதியினர் கொண்டிருந்தனர்.

          இதற்கு எதிர் கருத்தை கொண்டிருந்த, அதாவது மாற்றங்கள் யாவும் பயன் நோக்கியது அல்லது முன் நிர்ணயிக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்த அணியிலும் குறிப்பிடும் படியான கிரேக்க தத்துவவியாளர்கள் இருந்தனர். இவர்கள் இயல்திட்ட வாதத்தை(Teleology) முன்வைத்தனர். அதாவது இயற்கையில் உயிர்களில் தோன்றும் இத்தகைய மாறுதல்களின் காரண காரிய தொடர்புகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே என்று வாதிட்டனர். ஹெராகிளிடஸ் போன்றவர்கள் இது கடவுளின் திட்டம் என வாதிட்டனர்.
      
அதே போன்று அரிஸ்டாட்டில் , பிளாட்டோ போன்றவர்கள் இயல்திட்ட வாதத்தை முன்வைத்தனர். அதாவது மனிதன் என்ற உயரிய படைப்பு நோக்கின் தோல்வியுற்ற சோதனைகளின் விளைவுதான் ஏனைய உயிரினங்கள் என்ற கருத்தை கொண்டிருந்தனர். இத்தகைய கருத்தை பிளாட்டோ குறியதால் தற்கால் பரிணாமவியலாளரான ஏர்ண்ஸ்ட் மைர் பிளாட்டோவை "Great Antihero of Evolution" என்று கூறுகிறார்.(2
     இயல்திட்ட வாதங்களின் எண்ண ஓட்டங்கள்தான் லாமார்க்கின் தத்துவங்களில் காண முடியும். இந்த வகை பரிணாம கோட்பாடுகளை லாமார்க்கிஸம் என்று இன்றைய நவீன டார்வினிஸ்ட்களால் கூறப்பட்டு மறுக்கவும் படுகிறது. ஆனால் உண்மையில் பரிணாமவியலின் பல கொள்கைகள் இந்த லாமார்க்கின் கோட்பாட்டின் அடியொட்டி பயணிக்கும் நிலையில் தான் இருக்கிறது என்பது வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் நாம் புரிந்து கொள்வோம்.........

தற்கால பரிணாமவியலின் ஆரம்பம்: 
     ஹட்டன் (1795) என்ற நிலவியலாளர் படிப்படியாக முடிவை அடையும் கொள்கையை (Gradualism) முன்வைத்தார். நிலமானது பல படிநிலைகளில் சிறுமாற்றங்களால் நிலவியல் அமைப்புக்களான மலை, ஆறு போன்றவற்றை தோற்றுவிக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். அதுவரை செல்வாக்குடன் இருந்த அழிவமைவு கோட்பாட்டை(Catastrophism) மறுத்தார்.
அதாவது மாபெரும் வெள்ளங்களும், நிலநடுக்கங்களும் மேலும் அது போன்ற பேரழிவுகளுமே நிலவியல் அமைப்பை தோற்றுவித்தன என்ற கோட்ப்பாடை மறுத்தார். எப்படி நிலவியல் மெதுவான சிறு சிறு மாற்றங்களால் நில அமைப்புகளை தோற்றுவிக்கின்றதோ அதே போல் மாறுபட்ட உயிரினங்கள் ஒரு உயிரில் இருந்து சிறு சிறு மெதுவான மாற்றங்களால் தோன்றின என்ற கருத்தை முன்வைத்தார்.

     
 
சார்லஸ் லையல்(1830) : டார்வினின் நண்பர். இவரும் படிப்படியாக படிவளர்ச்சியால் முடிவை அடையும் கொள்கையை (Gradualism மறுவடிவமான Uniformitarianism) முன்வைத்தார். இவர் டார்வினின் இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம் (Origin of Species by Natural Selection) வெளிவர பெரிதும் உதவியாக இருந்தார்.

பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத அழிவமைவுக் கோட்பாடு: 


    படிவளர்ச்சி கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை அழிவமைவு கோட்பாடாகும். இதை முன்பே விளக்கியது போல் இது பேரழிவுகளே நில அமைப்புக்களை தோன்றுவதற்கு காரணமாயின். இதுதான் வேறுபட்ட உயிர்கள் தோன்ற காரணமாயின என்ற கருத்தை முன்வைத்தது. புகழ்பெற்ற பக்லேண்ட், கூவியர் போன்ற நிலவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடாகும். இந்த கோட்பாடானது பரிணாமவியலாளர்களும் பெரிது ஒவ்வாமையை ஏற்படுத்த மூலகாரணம்:

1)இந்த கோட்பாட்டை தூக்கிப் பிடித்தால் அன்றிருந்த கிறித்தவர்கள் கூறுவது போல் இவ்வுலகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என கூறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

2) ஒரு திடீர் செயல்பாடு ஒரு உயிரினத்தை அழித்து வேறு ஒரு உயிரினத்தை தோற்றுவிக்கும் என்ற கொள்கையை இந்த கோட்பாடு முன்வைப்பதால், இந்த இயற்கை நிகழ்வுகள் யாவும் முன்முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்திற்காக நிகழ்கிறது என்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. ஆக இறைமறுப்பை முன் நிறுத்தும் பரிணாமவியலாளர்களால் இந்த கோட்பாட்டை ஜீரணிக்க சிறிது சிரமமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. 
இத்தகைய காரணங்களின் சாயல் லேசாக தெரிவதால்தான் லாமார்க்கின் கோட்பாடே மறுக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த கோட்பாடெல்லாம் முடிவு நிர்ணயிக்கப்பட்டதாக கூறுகிறதோ அவையெல்லாம் இன்றைய டார்வினிஸ பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத கோட்பாடாக ஆகிவிடும். ஏனென்றால் அவை அறிவார்ந்த இறை( Intelligent Creator) குறிபிட்ட நோக்கத்திற்காக நிகழ்வுகளை தோற்றுவிக்கிறார் என்ற கொள்கைக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற பயம்தான்.

      ஆனால் விதி அவர்களை விடுவதாக இல்லை. இன்றும் இந்த கோட்பாடு கூறும் விளைவுகளின் சுவடுகளை படிமங்கள்(fossil) கொண்டிருக்கின்றன. டைனோசர் போன்ற உயிர்களின் பேரழிவிற்கு இத்தகைய இயற்கை சீற்றங்களே குறிப்பாக விண்கல் மோதலே காரணமாக யூகிக்கப்படுகிறது.   
(ஆனால் டைனோசரின் சமகாலத்தில் வாழ்ந்த உயிர்கள் இன்றும் வாழும் படிமங்களாக பூமியில் வாழ்கின்றன என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று)

           பல ஆயிரம் ஆண்டுகள் நிலவியல் மாற்றங்களை சில மணிநேரங்களில் சுனாமி, நிலநடுக்கம், விண்கல் மோதல் போன்ற இயற்கை சீற்றங்கள் தோற்றுவித்துவிடுவதும், அதை இன்றும் நாம் காண்முடிவது பரிணாமவியலாளர்களை சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஆனால் இதில் கூத்து என்னவென்றால் இதே போன்ற திடீர் வெடிப்புக்கள் உயிர் அழிவுகள் அல்ல உயிர் தோற்றங்கள் உயிர்படிமங்களிலும் (fossil) காணப்படுவது படிவளர்ச்சி கொள்கையை போற்றும் பரிணாமவியலாளர்களுக்கு சம்மட்டி அடிதான். ஆனால் இதே நிலைதான் பரிணாம கோட்பாட்டின் மையத்திலேயே இருக்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் காண்போம்.

Ref:
1. P.No.5 ,Evolution by Mark Ridley
2. P.No.304, The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance

பரிணாமம் உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


                    பரிணாமம் என்ற அறிவியல் ஆய்வு தொடரினுள் செல்வதற்கு முன்பு ஏன் இந்த தலைப்பு என்பதையும், இந்த தொடரின் கட்டமைப்பு என்ன என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டால் இந்த ஆய்வு கட்டுரை தொடரை வாசிப்பவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறோம். இன்ஷா அல்லாஹ்.

ஏன் இந்த தலைப்பு:

            நாம் இந்த தலைப்பை தொடராக வழங்க வேண்டும் என்ற எண்ணமானது சமூக வளைத்தளங்களில் அதிகமாக கம்பு சுற்றும் நாத்திகர்களாலும், நாத்திக வேடமணிந்த கிறித்தவ மிசனரிகளாளும் காவிகளாளும் தோற்றுவிக்கப்பட்டதே. ஆனால் நாம் இங்கு குறிப்பிட்ட இந்த கூட்டத்தினர் நாம் கண்டவரையில் அறிந்ததென்னவென்றால் இவர்களுக்கு பரிணாமம் குறித்து எந்த புரிதலும் இல்லை. குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமல்தான் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு கூட்டத்தினர் சமூக வளைத்தளங்களில் கதை அளந்து வருகின்றனர். அதே போல் பரிணாமவியலை எதிர்த்து பதிவிடும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய அறிஞர்களின் அடியொட்டிய எதிர் கருத்துகளையே பதிகின்றனர். இதற்கான மூல காரணம் நாம் பரிணாமவியல் குறித்த மூல ஆதார நூல்களில் இருந்து கற்காததும், பரிணாமவியலின் தற்போதைய போக்கு குறித்த அப்டேட் இல்லை என்பதுமே ஆகும். (எ.டு) ஒட்டங்கச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கான காரணத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பதிவிடும் போது குட்டை கழுத்திருக்கும் ஒரு உயிரினம் அது தரையில் உணவு இல்லாமல் மேலே இருக்கும் கிளைகளில் இருக்கும் உணவை உட்கொள்ள முயற்சித்ததின் விளைவே என்ற கருத்தை முன்னிறுத்தி விமர்சிப்பார்கள். (பரிணாமவியலில் இந்த உதாரணத்தையும் பாக்டீரியாவின் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு குறித்த உதாரணத்தையும் நாம் பரிணாமவியலின் இந்த தொடரில் அடிக்கடி பயன்படுத்துவோம். ஆக இத்தகைய உதாரணங்கள் கூறப்படும் இடங்களை சற்று கவனத்துடன் கடந்து செல்ல பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்).
 ஆனால் இன்றைய பரிணாமவியலாளர்கள் இந்த கருத்தை கொண்டிருக்கவில்லை. இது டார்வினுக்கும் முன்பாக லாமார்க் என்பரால் எடுத்தாளப்பட்ட கருத்தாகும். இதன் பிறகு பரிணாமம் என்பது டார்வின் முதல் இன்றிருக்கும் டாக்கின்ஸ் வரை பல படிநிலை பரிணாமத்தை அடைந்துவிட்டது அடைந்து கொண்டுள்ளது. ஏன் இந்த கட்டுரை தொடர் எழுதி முடிப்பதற்குள் தற்போதைய பல பரிணாம புரிதல்கள் காணாமல் கூட போய்விடலாம். பல புதிய புரிதல்கள் ஏற்படவும் செய்யலாம். ஆக தொடர் அப்டெட்டில் இருப்பது ஆகச்சிறந்தது.

                  ஆக பரிணாமவியலை நாம் நுணுகிப்பார்க்கும் போது அதில் இருக்கும் பல ஓட்டைகள் பட்டவர்த்தணமாய் சாமானியனுக்கும் புரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால்தான்
அதில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. உண்மை என்பது விளங்குவதற்கு எளிது அதை நுணுகிப்பார்க்கும் போது. அதுபோல் பரிணாமத்தில் இருக்கும் பல முரண்பாடுகளும் குறைகளும் சாமானியனுக்கும் விளங்கும்படி செய்வதே இந்த கட்டுரை தொடரின் நோக்கமாய் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த தொடர்களின் இறுதியில் இது ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இந்த தொடரின் கட்டமைப்பு:

                    ஆக நமது குறிக்கோளான மக்கள் விழிப்புணர்வு மற்றும் விமர்சனம் இரண்டையும் நிறைவேற்றும் விதமாக இந்த தொடர்கள் அமையவுள்ளன இன்ஷா அல்லாஹ். பரிணாமவியலின் அடிப்படை கோட்பாடுகளை விளக்கி அவற்றுள் எழும் விமர்சனங்களை ஆதாரப்பூர்வமாய் எடுத்துரைக்கும் விதமாக இந்த தொடர்கள் அமையவுள்ளன. ஆக தொடர்களை வரிசை மாறாமல் தொடர்ந்து படிக்குமாறு பார்வையாளர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.